கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாய்–மகளை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் சுலோச்சனா. இவரது மகன் அருண். மகள் சுகன்யா.
அருண் தரமணியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி லாவண்யா.
நேற்று இரவு அருணும், லாவண்யாவும் வீட்டில் உள்ள தனி அறையிலும், சுலோச்சனாவும், அவரது மகள் சுகன்யாவும் வீட்டின் முன் அறையிலும் தூங்கினர்.
நள்ளிரவில் 2 வாலிபர் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் ஒவ்வொரு அறையிலும் புகுந்து பீரோவை தேடினர்.
பீரோ இருக்கும் இடம் தெரியாததால் சுற்றிய கொள்ளையர்கள் சாமி அறையில் இருந்த பொருட்களை கீழே வீசினர்.
சத்தம் கேட்டு எழுந்த சுலோச்சனாவும், சுகன்யாவும் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
அருணும், அவரது மனைவியும் தனி அறையில் உள்பக்கமாக பூட்டி தூங்கியதால் அவர்களுக்கு அலறல் சத்தம் கேட்கவில்லை.
இதற்குள் உஷாரான கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி சுலோச்சனா, சுகன்யா கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் வந்தது குறித்து சுலோசன்னாவும் சுகன்யாவும், அறையில் தூங்கிய அருணை எழுப்பி தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கவரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நகை – பணம் இருந்த பீரோ அருண் தூங்கிய அறையில் இருந்ததால் தப்பியது.
கொள்ளையர் 2 பேரும் பேண்ட், பனியன் அணிந்து வந்து உள்ளனர். மேலும் உடல் முழுவதும் எண்ணை தடவி இருக்கிறார்கள். கொள்ளையடிக்கும் போது யாரேனும் விரட்டி பிடித்தால் அவர்களின் கையில் சிக்காமல் வழுக்கி ஓட நூதனமான முறையில் வந்து இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ஏடூர் கிராமத்தில் பூட்டி கிடந்த அரசு ஊழியர் வீடு உள்ள 3 வீடுகளில் கொள்ளையர்கள் நகை – பணத்தை அள்ளிச் சென்று விட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த குணசுந்தரியிடம் மர்ம நபர்கள் நகையை பறிக்க முயன்ற சம்பவமும் நடந்து உள்ளது.
கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்து தாய்– மகளை மர்ம ஆசாமிகள் கத்திமுனையில் மிரட்டி நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating