1943-ல் ஜப்பான் வீரர் அனுப்பிய தபால்: 64 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த விநோதம்!
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய வீரர் ஒருவர் பர்மா போர்க்களத்தில் இருந்து அனுப்பிய கடிதம் 64 ஆண்டுக்குப் பிறகு தற்போது கிடைத்தது. இந்தக் கடிதத்தை கொண்டு வந்த பல்கலைக் கழக மாணவி யுகோ கோஜிமாவுக்கும் பாதுகாத்து வைத்திருந்த முன்னாள் அமெரிக்க வீரரின் குடும்பத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இத் தகவலை முகோகாவா பெண்கள் பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்தக் கடிதம், தெற்கு கோச்சியிலுள்ள சிஜோவ் நகோனாவின் (80) கையில் சென்று சேருவதற்கு முன் பர்மாவிலிருந்து நாகசாகி, அரிசோனா மற்றும் ஹவாய் பகுதிகளுக்கெல்லாம் சென்று வந்துள்ளது. இந்தக் கடிதத்தை நொபுசிக்கா யமசிஷிடா என்பவர் வரைந்துள்ளார். அவர், ராணுவப் பணியில் சேருவதற்கு முன் தன்னுடன் வேலைப் பார்த்த நகோனா என்பவருக்கு பக்கத்து கடை விலாசத்துக்கு எழுதி இருந்தார். ஹவாயிலிருந்து வந்து பயிலும் முகோகாவா பல்கலைக்கழக மாணவி யுகோ கோஜிமா (20) கூறியது: ஹவாயில் உள்ளூர் பெண் ஒருவர், கோஜிமாவிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்தக் கடிதத்தை இறந்துப் போன தன்னுடைய மாமனார் பாதுகாத்து வந்ததாக கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட சமயத்தில் அமெரிக்கப் படை ஜப்பானில் நிறுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் நாகசாகியில் படையிலிருந்த அந்தப் பெண்ணின் மாமனாரிடம் இந்தக் கடிதம் கிடைத்துள்ளது. பின்னர், அரிசோனாவில் வசித்துவந்த இவர், அதற்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து இறந்தார். இருப்பினும், அங்கிருந்து ஹவாய்க்கு இடம்பெயர்ந்த அவருடைய மகன் இந்தக் கடிதத்தை பாதுகாத்து வந்துள்ளார் என கோஜிமா கூறினார்.
“இந்தக் கடிதம் கிடைத்ததைப்போல அவரை மீண்டும் சந்திப்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் அவர் இறந்துவிட்டார்’ என கடிதத்தைப் பெற்ற நகோனா கூறினார். கடிதத்தில் 1943, பிப். 16 என்ற தேதியிடப்பட்டிருந்தது.