முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல காது குடையும் பஞ்சு குச்சியுடன் வந்த மனித வெடிகுண்டு!
கராச்சிக்கு வியாழக்கிழமை வந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவை கொல்ல திட்டமிட்ட மனித வெடிகுண்டு, காது குடையும் பஞ்சுக் குச்சியை பேநசீர் கேட்டதாகக் கூறி பேரணியின்போது அவரது கார் அருகே செல்ல 2 முறை முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ, அந்நாட்டு அதிபருடன் செய்துக் கொண்ட உடன்பாட்டையடுத்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பினார். அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பேரணி நடத்தினார். இந்தப் பேரணியின்போது காரில் சென்ற பேநசீரை கொல்ல வெடிகுண்டு கட்டிய மர்ம நபர் கூட்டத்தில் நுழைந்துள்ளார். அப்போது அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வந்து, காது குடையும் பஞ்சுக் குச்சியை பேநசீர் கேட்டதாகவும் அதை அவரிடம் தர செல்வதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு அந்த மர்ம நபர் 2 முறை, பேநசீரை நோக்கிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகளும், போலீஸôரும் தடுத்து விட்டனர். இத்தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் தெரிவித்துள்ளது. பேநசீர் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் புலனாய்வுத் துறை அதிகாரிகளை களையெடுக்கும் பணியில் உடனடியாக ஈடுபடுவார் என்பதாலேயே பேநசீரை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.