செம்மரக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன்: நடிகை நீத்து அகர்வால்!!
செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
நேற்று கையெழுத்திட போலீஸ் நிலையம் வந்த நீத்து அகர்வால் ஆலகட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
நான் மஸ்தான் வலியை காதலித்து திருமணம் செய்தேன். ஆனால் இதனை விரும்பாத எனது பெற்றோர்கள் என்னை கைவிட்டு விட்டார்கள். அதன் பிறகு மஸ்தான் வலியும் என்னை அடித்து துன்புறுத்தினார். அவரால் அடிபட்ட காயம் எனது உடலில் இன்னும் தழும்பாக உள்ளது. இப்போது அவரிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. டி.வி.க்கு பேட்டி அளிக்காதே என்று என்னை மிரட்டுகிறார்கள்.
என்னை மிரட்டும் நபர்களின் பெயரை விரைவில் வெளியிடுவேன். தொடர் கொலை மிரட்டலால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். செம்மரக்கட்டை கடத்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குற்றமற்றவள் என்று நிருபிக்க முடியும் என்று கருதினேன். ஆனால் தற்போதைய நிலையை பார்க்கும் போது இந்த வழக்கில் இருந்து நிரபராதி என்ற பெயரோடு விடுதலையாவேனா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
நான் குற்றமற்றவள் என்று நிருபிக்க தவறிவிட்டால் தற்கொலை செய்வேன். எனது அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லை. சாப்பிட கூட காசு இல்லை. இதில் எனக்கு கொலை மிரட்டல் வேறு வருகிறது.
இவ்வாறு நீத்து அகர்வால் கண்ணீர் மல்க கூறினார்.
Average Rating