வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: பெற்றோர் மீது வழக்கு!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது40). இவரது மனைவி பாண்டியம்மாள் (35). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் இந்த ஆண்டு பிளஸ்–2 முடித்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஆறுமுகம் தனது மகளை உறவினர் பையன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அடுத்த வாரம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது.
மைனர் பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்து வருவது குறித்த தகவல் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாளுக்கு கிடைத்தது. அவர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசாருடன் சின்னமநாயக்கன்பட்டிக்கு சென்று ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்வது குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் மைனர் பெண்ணை மீட்டு மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மைனர் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்த ஆறுமுகம், பாண்டியம்மாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating