பாதுகாவலர் கிண்டல் செய்ததால் சமாஜ்வாடி தலைவரின் கார் மீது ஏறி பெண் ரகளை!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான அபினவ் சர்மா தனது மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு காரில் ஆக்ராவில் சென்று கொண்டு இருந்தார்.
அவருடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவரும் சென்றார். அப்போது சாலையில் 22 வயது பெண் சாத்வி பாண்டே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
காருக்குள் இருந்த பாதுகாப்பு அதிகாரி இளம் பெண்ணைப் பார்த்து கண் சிமிட்டினார். இதனால் ஆவேசம் அடைந்த அந்தப் பெண் காருக்கு முன் நின்று வழி மறித்தார்.
திடீர் என்று கார் முன்பகுதியில் ஏறி நின்று ஆவேசமாக சத்தம் போட்டு ரகளை செய்தார். காருக்குள் இருந்த சமாஜ்வாடி தலைவரையும், மற்றவர்களையும் வெளியே வா… வெளியே வா.. என கூச்சல் போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு கூட்டம் கூடியது.
இரு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதன் பிறகும் அந்தப் பெண் கார் மீது ஏறி நின்றவாறு கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தார்.
திடீர் என்று காரின் முன் கட்டப்பட்டு இருந்த கொடிக் கம்பியை பிடுங்கி கண்ணாடியை உடைத்தார். இதற்குள் அங்கு கூடியிருந்தவர்கள் அந்தப் பெண்ணை சமரசம் செய்தனர்.
பாதுகாப்பு அதிகாரி வெளியே வந்து அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டதுடன் போராட்டத்தின் போது உடைந்த செல்போனுக்கு நஷ்ட ஈடாக ரூ.6,500 வழங்கினார்.
இதற்கிடையே பெண் ரகளை செய்த வீடியோ உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பாகி மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating