ஸ்ரீவில்லிப்புத்தூர் கருவூலம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீசில் சிக்கினார்!!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியில் தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், கருவூலம் ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளது. இங்குள்ள கருவூலத்தில் கடந்த மார்ச் மாதம் 20–ந் தேதி மர்ம மனிதர்கள் புகுந்து அங்கிருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கோர்ட்டு நடவடிக்கையின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, தேர்தலின்போது காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய தஸ்தாவேஜூக்கள் கருவூலத்தில் இருந்து கொள்ளை போனதாக கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ரூ. 24 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் (வயது20), தாதன்குளத்தை சேர்ந்த காளி என்ற காளிராஜ், சிவகாசி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்துக்காமாட்சி, தவசீலன், விருதுநகர் முதலிப்பட்டி மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதில், மாரிமுத்துவிடம் இருந்து ரூ. 24 லட்சம் மதிப்பிலான நகை–பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடாசலபுரத்தை சேர்ந்த முருகேசன் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக சிவகாசி தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று முருகேசனை பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர் ஏற்கனவே கைதான சுப்புராஜின் தந்தை ஆவார்.
Average Rating