அமெரிக்க கவர்னராக இந்தியர் தேர்வு
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடந்த கவர்னர் தேர்தலில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்று இருக்கிறார். அவர் பெயர் பாபி ஜிந்தால். 36 வயதிலேயே இந்த உயரிய பதவியை அவர் பெற்று இருக்கிறார். 11 பேரை தோற்கடித்தார் அமெரிக்காவின் லூசியானா மாநில கவர்னர் தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் இந்தியர் பாபி ஜிந்தால் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 11 பேர் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரையும் தோற்கடித்து, ஜிந்தால் வெற்றி பெற்றார். அவர் 53 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி அடைந்தார். இவருக்கு ஆதரவாக 625,036 ஓட்டுக்கள் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் வால்ட்டர் போயாசாவுக்கு 18 சதவீத அதாவது 208,690 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன. ஜனவரி மாதம் பதவி ஏற்பு பாபி ஜிந்தால் வருகிற ஜனவரி மாதம் கவர்னராக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். கடந்த 130 ஆண்டுகளில் வெள்ளையர் அல்லாத ஒருவர் இந்த பதவிக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். அதோடு மிக இளவயதில் இந்த பதவிக்கு வந்தவரும் இவர் தான். அவருக்கு இப்போது வயது 36. 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கவர்னர் தேர்தலில் பாபி ஜிந்தால் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த இவர், மாநில நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பேன் என்று சபதம் எடுத்து இருக்கிறார்.
பஞ்சாப் கிராமத்தில் கொண்டாட்டம்
பாபி ஜிந்தாலின், மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலம் கான்புரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இதனால் பாபி ஜிந்தால் கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்றதும், அந்த கிராம மக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நடனமாடி மகிழ்ந்தனர். கொண்டாட்டங்களால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கியது.
பாபி ஜிந்தாலின் சித்தப்பா மகன் குல்ஷன் ஜிந்தால் கூறுகையில், பாபியால் எங்கள் குடும்பத்துக்கும், கிராமத்துக்கும் மிகப்பெரிய கவுரவம் கிடைத்து உள்ளது என்று குறிப்பிட்டார். பாபியின் தந்தை அமர் சந்த் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இருந்து தான் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். என்றும் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாபி தன் தந்தையுடன் கிராமத்துக்கு வந்த போது ஒரு முறை பார்த்து இருக்கிறேன் என்றும் கூறினார்.
அமர் ஜிந்தாலுக்கு ஒரு அண்ணனும், 2 தம்பிகளும் உள்ளனர். என் தந்தை பஜன்லால் அமரின் தம்பி ஆவார். பெரியப்பா ஷியாம்லால். இன்னொரு தம்பி தரம்பால் ஆவார் என்று தெரிவித்தார்.