கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே உள்ள வசந்தி (35) என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் நமணசமுத்திரத்தில் உள்ள மனைவி வீட்டிலேயே தங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பகுதியிலேயே மளிகை கடை, டீக்கடை மற்றும் டி.வி. மெக்கானிக் கடைகளை நடத்தி வந்தார். தற்போது இந்த தம்பதிக்கு அன்புக்கரசி (17), அபிராமி (15), பவித்ரா (13) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி ரெயில்வே தண்டவாளத்தில் கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய புதுக்கோட்டை ரெயில்வே போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று திருச்சி ரெயில்வே எஸ்.பி. அலுவலகத்திற்கு கிருஷ்ண மூர்த்தியின் தாய் சிங்கம்மாள் தனது பேத்திகளான அன்புக்கரசி, அபிராமி ஆகியோருடன் வந்தார். எஸ்.பி. இல்லாததால் அவரது உதவியாளரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
எனது மகன் கிருஷ்ணமூர்த்தி திருமணத்திற்கு பின் கடந்த 18 வருடங்களாக அவரது மனைவி வசந்தி வீட்டில் தங்கியிருந்து கடைகளை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி ரெயிலில் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வசந்தி கூறினார்.
இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்து சென்று விசாரித்த போது எனது மகன் சாவில் மர்மம் இருப்பது தெரிந்தது. மேலும் எனது மருமகள் வசந்திக்கும், கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வரும் வாலிபர் ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி தற்கொலை நாடகமாடியதும் தெரிய வந்துள்ளது.
தற்போது எனது பேத்திகளான அபிராமி மற்றும் பவித்ராவை, வசந்தி மற்றும் அந்த வாலிபரும் சேர்ந்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அவர்கள் 2 பேரும் தப்பித்து வந்து எங்களிடம் இதனை தெரிவித்தனர். எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளனர்.
Average Rating