தந்தையை தாய்நாட்டுக்கு அனுப்ப அமெரிக்க இந்தியரின் கொடூரம்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், தனது முதிய தந்தையை இந்தியாவுக்கு அனுப்புவதற்காக, சுத்தியால் தாக்கி நர்சிங் ஹோமில் சேர்த்தது தெரியவந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவின் பாஸ்டர் சிட்டியில் வசிப்பவர் ஜெயந்திபாய்(57). படேல் இவரது தந்தை வயது 81. தனது தந்தை தொடர்ந்து தன்னுடன் வசிப்பதை ஜெயந்திபாய் விரும்பவில்லை. தனது தந்தையை இந்தியாவுக்கு செல்லுமாறு வற்புறுத்தினார். ஆனால், இந்தியாவில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், தந்தை படேல் மறுத்து வந்தார். பெரும்பாலும் சக்கர நாற்காலியையே நடமாடுவதற்காக பயன்படுத்தி வந்தார் தந்தை படேல். தனது தந்தையை இந்தியா திருப்பி அனுப்புவதற்கு என்ன வழி என்று யோசித்தார் ஜெயந்திபாய். இந்நிலையில், குளியலறையில் மண்டையில் அடிபட்ட தந்தை படேலை அருகில் உள்ள நர்சிங் ஹோமில் சேர்த்தார் ஜெயந்திபாய். ஆனால், அவரது நிலை ஆபத்தாக இருக்கவே, மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தந்தை படேல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். நினைவு திரும்பிய நிலையில் இருந்த தந்தை படேலிடம், மருத்துவமனை டாக்டர்கள், “குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டீர்களா?’ என்று கேட்ட போது, அவர் சொன்ன பதில் திடுக்கிட வைத்தது. “நான் குளியலறையில் இருக்கும் போது எனது மண்டையில் சுத்தியால் எனது மகன் ஜெயந்திபாய் ஓங்கி அடித்தான். நான் மயங்கி விட்டேன்’ என்று தந்தை படேல் கூறியதும் டாக்டர்கள் உறைந்து போயினர். உடனடியாக போலீசுக்கு தகவல் பறந்தது.
இது தொடர்பாக பாஸ்டர் சிட்டி போலீஸ் கமிஷனர் ஜான் பிரோமின் கூறியதாவது:தனது தந்தையை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் ஜெயந்திபாயின் நோக்கம். இதனால் தான் தந்தையின் மண்டையில் தாக்கி உள்ளார். இதன் மூலம் அவரை எப்படி இந்தியா அனுப்ப முடியும் என்று ஜெயந்த்பாய் நம்பினார் என்பது தெரியவில்லை. பிரச்னையில் இருந்து தப்பிக்கவே, தனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காமல் நர்சிங் ஹோமில் சேர்த்துள்ளார். தந்தை படேலுக்கு இரண்டு இடத்தில் மண்டை உடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயந்திபாய் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். தற்போது ரூ. இரண்டு கோடி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் ஜெயந்திபாய். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு ஜான் பிரோமின் கூறினார்.