பிரான்சில் புலிகளின் 8 வங்கிக் கணக்குகள் `சீல்’ வைப்பு
அண்மையில் பிரான்ஸ் நாட்டில் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கெதிராகத் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ள பிரான்ஸ் பொலிஸ்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரான்ஸிலுள்ள வங்கிகளில் குறிப்பாக பாரிஸ் நகரிலுள்ள பிரதான வங்கிகள் உட்பட எட்டு வங்கிகளில் புலிகள் இயக்கத்தினர் பெருந்தொகையான பணத்தை வைப்பிலிட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பிரான்சில் சட்டவிரோத நிதிசேகரிப்பு உட்பட பல பயங்கரவாதச் செயற்பாடுகள் மூலம் புலிகள் இயக்கத்தினராலும் இயக்கத்தின் பிரதிநிதிகள் பிரமுகர்களாலும் அங்கு வாழும் தமிழர்களிடமிருந்து சேகரித்த பணத்தையே இவ்வாறு அவர்கள் பிரான்ஸ் வங்கிகளில் மேற்படி எட்டு வங்கிக்கணக்குகளிலும் சேர்த்து வைத்திருந்தனர். தற்போது இவற்றைப் பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்து அந்த வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் தடுத்து வைக்கும்படி பொலிஸ் பிரிவு வங்கிக்கு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எட்மன்ட் வில்போட் பிரான்ஸ் பத்திரிகைக்களித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேற்படி, வங்கிகளில் 8 கணக்குகளிலும் இடப்பட்டிருக்கும் பணத்தொகை 20 மில்லியன் யூரோக்களுக்கும் மேற்பட்டது. இந்தப் பணம் பிரான்சில் மட்டுமல்ல மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் அங்கு வாழும் தமிழர்களிடமும் பலாத்காரமாகப் புலிகள் இயக்கத்தினராலும் இயக்க ஆதரவாளர்களாலும் சேகரிக்கப்பட்டதே எனவும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தியே ஷ்ரீலங்காவில் பல்வேறு அழிவு நடவடிக்கைகளையும் செய்து வருவதாகவும் பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது.
புலிகள் இயக்கத்தினர் அவர்களது தாக்குதல்களுக்காகப் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை இந்த வங்கிக் கணக்குகள் மூலம் கொள்வனவு செய்துள்ளதாகவும் அத்துடன், புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியில் செய்துவரும் போதைவஸ்து வியாபாரத்திற்காகப் பிரசாரங்கள் சட்டவிரோத விளம்பரங்களைச் செய்வதற்கும் இந்தப் பணமே பயன்படுத்தப்படுவதாகவும் மேலும், பிரான்ஸ் பயங்கரவாதத் தடுப்புத்துறை அறிவித்துள்ளது. இவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு எதிராகப் பல்வேறு வகையிலும் செயற்படும் ஒரு பயங்கரவாத அமைப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம் இருப்பதாக அப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரி எட்மன்ட் வில்போட் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.