ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு: 16 வாகனங்களுக்கு அனுமதி ரத்து!!
பள்ளி வாகனங்களில் விபத்து நேரிடாவண்ணம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி விருதுநகர் மாவட்ட கலெக்டர், துணை போக்குவரத்து ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளிகளில் இயங்கும் அனைத்து பள்ளி வாகனங்களும், பல்துறை அலுவலர்களும் குழுவாக இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர், உதவி காவல் கண்காணிப்பாளர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர் மூக்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 140 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து தகுதிகளும் அமைய பெற்ற வாகனங்களுக்கு ஆய்வு சான்று வாகனத்தின் முன்புற கண்ணாடிகளில் ஒட்டப்பட்டது.
குறைகள் கண்டறியப்பட்ட 16 வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று மறுக்கப்பட்டது. குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்களை வருகிற 27–ந்தேதி சுட்டி காட்டப்பட்டுள்ள குறைகளை சரி செய்து ஆய்வுக்குட்படுத்தி ஆய்வு சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்கள் சாலையில் இயக்கப்படுவது தெரிய வந்தால் அவை சிறைபிடிக்கப்பட்டு அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Average Rating