அரியலூர் அருகே கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கணவர்!!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று காலை இளம் பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் பாலத்தின் கீழ் இறங்கி பார்த்துள்ளனர். அப்போது அங்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஓடை தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே 2 வயது ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.
உடனடியாக சம்பவத்தை பார்த்தவர்கள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த செந்துறை போலீசார் முதலில் அந்த பெண்ணை கரைக்கு கொண்டு வந்து பின்னர் ஆம்புலன்சு மூலம் அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய பெண் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது மனைவி சகுந்தலா (வயது 27) என்றும், அருகில் அழுது கொண்டிருந்தது அவரது மகன் அசோக் (2) என்றும் தெரியவந்தது.
குடும்ப தகராறு காரணமாக தன் மனைவியை ஏமாற்றி லாரியில் அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் செந்துறை அருகே பாலத்தின் மேல் வைத்து சகுந்தலாவின் கழுத்தை அறுத்ததோடு அவரை பாலத்தின் கீழ் கொண்டு வந்து ஓடையில் வீசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அந்த குழந்தையை ஒன்றும் செய்யவில்லை.
மீட்கப்பட்ட சகுந்தலா உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான அவரது கணவர் ரெங்கராஜையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating