விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு: தேனி மாவட்டத்தில் பச்சை வாழைத் தோட்டங்கள் அழிப்பு!!
தேனி பகுதியில் வாழைத் தோட்டங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்துக்கு வாழை விவசாயிகள் மாறி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூவன், ரஸ்தாலி, பச்சை, செவ்வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக திசுவாழை என்று அழைக்கப்படும். பச்சை வாழை, சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியதால், வாழை வரத்து குறைவாக இருந்தது. இரண்டாம் போக சாகுபடி முடிந்ததையடுத்து ஏராளமான விவசாயிகள் பச்சை வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டினர். இதனால் இந்த ஆண்டு வாழை வரத்து அதிகரித்தது.
பல்வேறு பகுதிகளில் தற்போது திருவிழாக்கள் நடைபெறுவதால் பூஜைகளுக்கு பூவன், ரஸ்தாலியின் தேவை அதிகரித்தது. பச்சை வாழையை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் மாம்பழ சீசன் நடப்பதால் பச்சை வாழை விலை வீழ்ச்சியடைந்தது. இதற்கிடையில் மழை காரணமாக பல இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்து விட்டதால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து தேனி புறநகர் பகுதியில் விவசாயிகள் வாழைத் தோட்டங்களை அழிக்கத் தொடங்கி விட்டனர். தேனி அருகே சத்திரப்பட்டி, வயல்பட்டி கிராம சாலை ஓரங்களில் விவசாயிகள் வாழைக்காய்களை வெட்டி வீதியில் வீசியுள்ளனர்.
இது குறித்து வாழை விவசாயி முருகன் கூறியதாவது:–
தேனி மாவட்டத்தில் விளையும் பச்சை வாழை சீப்புகளாக வெட்டி பெட்டிகளில் அடைத்து தனியார் நிறுவனங்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரிப்பு காணராமக விலை குறைந்து விட்டதால், தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகள் ஏற்றுமதிக்கு கூடுதல் செலவு ஆகிறது என்று கூறி, வாழையை வாங்க மறுத்து விட்டனர். உள்ளூரில் சில்லறை விற்பனையும் இல்லாததால் தோட்டங்களை அழித்து விட்டு பல ஆண்டுகளாக வாழை சாகுபடி செய்து வந்த விவசாயிகளும் மாறறு விவசாயங்களுக்கு மாறி வருகின்றனர் என்றார்.
Average Rating