முதுமலையில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது!!
புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக இன்று (புதன்கிழமை) முதல் 26–ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பகம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகத்தில் மசினகுடி, தெப்பக்காடு கார்குடி, நெலாக்கோட்டை, முதுமலை ஆகிய 5 சரகங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் உள்ள புலிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதே சமயம் 6 மாதங்களுக்கு ஒரு முறை புலிகளின் எண்ணிக்கை குறித்தும், அவற்றின் நடமாட்டங்கள் குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு பணி முதுமலை புலிகள் காப்பகத்தில் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. தொடர்ந்து வருகிற 26–ந் தேதி மாலை வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வ ஆர்வலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 200 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
அவர்கள் 40 குழுக்களாக பிரிந்து முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். முதல் நாளான இன்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு கணக்கெடுப்பு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாலை நிறைவடையும் இந்த பயிற்சிக்கு பின்னர் வனப்பகுதியினுள் அனைத்து குழுவினரும் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கி உள்ள இந்த புலிகள் கணக்கெடுப்பு பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக புலிகள் காப்பகம் இன்று காலை முதல் வருகிற 26–ந் தேதி மாலை வரை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
புலிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் 26–ந்தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட யானை சவாரி, வாகன சவாரி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளும் மூடப்பட்டு உள்ளன.
Average Rating