மூட நம்பிக்கையின் உச்சம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நடக்க வைத்த சூனியக்காரி!!
பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்த சூனியக்காரி ஒருத்தியிடம் ஒரு பெண் கூட்டிப் போவதும், துளியும் மனிதத்தன்மையற்ற அந்த சூனியக்காரி அந்தக் குழந்தையை எல்லோர் முன்னும் கொடுமைப்படுத்துவதும் இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகன் மாவட்டத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன, தன் குழந்தையின் உடல் அனலாய் கொதிப்பதைக் கண்டு பதைபதைத்த தாயும் அவரது கணவரும், குழந்தையை தூக்கிக் கொண்டு சூனியக்காரி(50) ஒருவரிடம் சென்றுள்ளனர். மந்திர தந்திர வித்தைகளில் வல்லமை பெற்ற அவரோ பூப்போன்ற அந்த சிசுவை நிர்வாணமாக்கி அதன் பிஞ்சுக் கழுத்தை தன் கைகளால் பிடித்து நடக்க வைத்துள்ளார் (இந்த கொடூரத்திற்குப் பெயர் ’சடங்கு’). இந்த அரிய காட்சியை அந்த கிராமமே திகைப்புடன் சுற்றிநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அழுது..அழுது குழந்தைக்கு மூச்சு முட்டியது.
நல்ல வேளையாக இந்தக் கொடுமையை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மோரிகன் மாவட்ட போலீசில் புகாரளிக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூனியக்காரி உட்பட 2 பெண்களைக் கைது செய்து, வலியில் அலறிக் கொண்டிருந்த அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது காய்ச்சல் குறைந்து அந்த குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating