பட்டாபிராமில் வாக்கிங் சென்ற தி.மு.க. பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!
பட்டாபிராமை அடுத்த தண்டுரை கிராமம், வள்ளலார் நகரில் வசித்து வருபவர் தாஸ் (வயது 52). காண்டிராக்டர். 41–வது வட்ட தி.மு.க. செயலாளர். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் தாஸ், வீட்டின் அருகே வாக்கிங் சென்றார். அப்போது 4 மர்ம வாலிபர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தனர்.
அதிர்ச்சி அடைந்த தாஸ் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். அவரை சுற்றி வளைத்த மர்ம ஆசாமிகள் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். தலை, கழுத்து, மார்பில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தாஸ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார்.
அந்த நேரத்தில் வீடுகளுக்கு பேப்பர் போடும் ஒருவர் அவ்வழியே வந்தார். அரிவாளுடன் வாலிபர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே மர்ம ஆசாமிகள் அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய தாசை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாஸ் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். எனவே தொழில் போட்டியில் தாஸை யாரேனும் கொலை செய்ய முயன்றனரா? அல்லது வேறு ஏதேனும் மோதல் உள்ளதா என்று விசாரித்து வருகிறார்கள்.
ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தி.மு.க. பிரமுகரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating