திருவட்டாரில் சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை!!
திருவட்டாரை அடுத்த செம்பாரவிளையை சேர்ந்தவர் சத்தியதாஸ். கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி பால்கனி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பால்கனி அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி சிரித்து பேசுவார். இதனை கணவர் சத்தியதாஸ் கண்டித்தார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சத்தியதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை மூண்டது. என்றாலும் பால்கனி பிறருடன் பேசுவதை நிறுத்தவில்லை. இதைக்கண்டு எரிச்சல் அடைந்த சத்தியதாஸ் மனைவி பால்கனியை சரமாரியாக அடித்து உதைப்பார். அவரை அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும் சமரசம் செய்து வைப்பார்கள்.
நேற்று மாலையிலும் பால்கனி பக்கத்து வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்தார். மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சத்தியதாஸ் இதைக்கண்டு ஆத்திரமடைந்தார். அவர் மனைவி பால்கனியுடன் தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சத்தியதாஸ் திடீரென வேலைக்கு கொண்டு செல்லும் சுத்தியலால் மனைவி பால்கனியின் தலையில் ஓங்கி அடித்தார். மண்டை உடைந்து படுகாயம் அடைந்த பால்கனி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பால்கனியை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பால்கனி பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் வழக்குப்பதிவு செய்து பால்கனியின் கணவர் சத்தியதாஸை கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating