ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தெய்வத்திருமகள்: தடைகளைத் தகர்த்தெறிந்து 10-ம் வகுப்புத் தேர்வில் சிகரம் தொட்டார்!!
நேகல் திவாரி முதன் முதலாக பள்ளிக்குச் சென்ற போது செல்லோ டேப் போட்டு ஒட்டியே அவளது ஆசிரியர்களால் அவளை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடிந்தது. காரணம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட நேகல் ஓடிக் கொண்டே இருப்பார். ஆட்டிசம் எக்காரணம் கொண்டும் தங்கள் குழந்தையை முடக்கி விடக் கூடாது என்பதில் உருதியாக இருந்த நேகலின் பெற்றோர் அவளுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர்.
தற்போது ICSE பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பில் 74 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரது பெற்றோரை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்துள்ளது. சிறு வயதிலிருந்தே பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்த நேகலுக்கு படிப்பில் மட்டுமல்ல ஓவியம் வரைவது, பியானோ இசைப்பது என்று இரண்டிலும் நல்ல திறமை.
”வீட்டுக்கு முதன் முதலில் எப்போது வாஷிங் மெஷின் வாங்கினோம். 7 வருடத்தில் என்ன என்ன தேதியில் சாய்பாபா கோவிலுக்கு போனோம் என்று அனைத்தையும் துல்லியமாக நினைவு வைத்திருப்பாள் நேகல். அவளால் மற்றவர்கள் கண்களைப் பார்த்து பேச முடியாது. கேள்விகளுக்கு உடனே பதில் சொல்ல முடியாது. இதனால் அவளுக்கு அவள் தங்கையை தவிர நண்பர்கள் என்று யாரும் கிடையாது.” என்கின்றனர் நேகலின் பெற்றோர்.
தனது வெற்றியின் மூலம் மும்பை நகரையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் நேகல், நமக்கு சொல்லும் சேதி இதுதான். ”ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடு மட்டுமே”.
Average Rating