திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் மாணவி முகம் கருகியது: உறவினர்கள் போராட்டம்!!
திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் கமலி (17). பிளஸ்–2 முடித்துள்ளார்.
கமலிக்கு கடந்த மாதம் 28–ந் தேதி தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் கம்பர் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அங்கு அளித்த மாத்திரையை சாப்பிட்ட கமலிக்கு முகம், கை, கால்கள் வீங்கியது. மேலும் உடல் முழுக்க தடிப்பு ஏற்பட்டு கருமை நிறத்திற்கு மாறியது. இதனால் அவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆனாலும் அங்கு சிகிச்சை அளித்தும் குணம் கிடைக்கவில்லை.
இது குறித்து கமலின் தந்தை சுப்பிரமணி கடந்த 6–ந் தேதி சாத்தாங்காடு போலீசில் புகார் செய்தார்.
கமலி சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு 3 வார காலத்திற்கு மேலாகியும் குணம் கிடைக்கவில்லை.
தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் தவறான சிகிச்சையின் காரணமாக தான் கமலிக்கு இந்த நிலை ஏற்பட்டது என அவரது உறவினர்கள் கருதினார்கள்.
எனவே அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் இன்று காலை கம்பர் தெருவில் உள்ள ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் தே.மு.தி.க கவுன்சிலர் ஏ.வி.ஆறுமுகம் பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் முற்றுகையை கைவிட்டனர்.
Average Rating