புதுவை அருகே தம்பிகளிடம் தூக்கு போடுவது பற்றி நடித்து காட்டிய மாணவி சாவு!!
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). பெயிண்டர். இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மேகலா (13), செல்வி என்ற மகளும், ராஜேஷ் (11) உள்பட 3 மகன்களும் உள்ளனர். மேகலா புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை மாரியப்பன் வேலைக்கு சென்றுவிட்டார். மதிய வேளையில் தனலட்சுமி வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மேகலா தனது தம்பிகளுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டு இருந்தார்.
திடீரென மேகலாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தூக்கு போட்டுக்கொள்வது குறித்து தனது தம்பிகளிடம் நடித்துகாட்ட நினைத்தார். வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்து வந்து மாமரத்தின் அடியில் போட்டு ஊஞ்சலுக்கு பயன்படுத்திய சேலையை கழற்றி மரத்தின் கிளையில் கட்டினார்.
பின்னர் சேலையின் ஒரு முனை பகுதியை கழுத்தில் சுருக்கு போட்டு நாற்காலி மீது ஏறி நின்றார். அப்போது நாற்காலி ஈர மண்ணில் புதைந்து போனது. இதனால் மேகலாவின் கழுத்தில் சேலை இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்ததும் அவரது தம்பிகள் ஓடிச் சென்று தனது தாயிடம் கூறினர்.
இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து மேகலாவை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று அதிகாலை 4 மணி அளவில் மேகலா பரிதாபமாக இறந்துபோனார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating