மீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை!!
மீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு மீஞ்சூர் பிருந்தாவன் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் குடியிருந்து வருகிறார்கள். மத்திய பாதுகாப்பு படையின் துணை கமாண்டராக இருப்பவர் ஒரிசாவைச் சேர்ந்த சுந்தரா (54).
இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஒரிசா சென்றார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இதே குடியிருப்பில் வசித்து வருபவர் சக்திவேல் (37). இவர் அனல்மின் நிலையத்தில் துணை பொது மேலாளாராக பணியாற்றி வருகிறார். இவரும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.
இவரது வீட்டு பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் பொன்னேரி போலீஸ் துணை கண்காணிப்பாளர் சேகர், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் நகை கொள்ளை போன 2 வீடுகளை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 2 வீடுகளையும் சேர்த்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிகிறது.
சுந்தரா, சக்திவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வந்த பின்னர்தான் எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது தெரிய வரும்.
மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating