2 சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்: போலீஸ்காரர் உள்பட 23 பேர் மீது வழக்கு!!
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் பிரபு என்பவருக்கும் திருச்சுனை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது.
இது குறித்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் சிறுமியின் தந்தை, தாய், மணமகன் பிரபு, அவரது தந்தை நடராஜ், தாய் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ரமேஷ். இவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். ரமேசுக்கும், 15 வயதே ஆன அவரது உறவினர் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரி கிரேசி பெருங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன், போலீஸ்காரர் ரமேஷ், அவரது தந்தை வேலு, தாய் வசந்தா, மருதாயி உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating