ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது.
வெயிலின் கொடுமை தாங்காமல் முதியவர்கள் பலர் புழுவை போல் சுருண்டு விழுந்து பலியாகிறார்கள். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் இழக்கிறார்கள்.
வெயில் கொடுமைக்கு இரு மாநிலங்களிலும் இதுவரை 427 பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 651 பேர் இறந்தனர். ஆந்திராவில் 400 பேரும் தெலுங்கானாவில் 251 பேரும் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 103 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் 116 டிகிரியை தாண்டி வெப்ப நிலை பதிவானது. கிருஷ்ணா மாவட்டம் சன்னவரத்தில் 117.3 டிகிரி வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக மசூலிப்பட்டினத்தில் 116.6 டிகிரி பதிவாகி இருந்தது.
கடலோர மாவட்டமான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் அனல் காற்று பயங்கரமாக வீசுகிறது.
வெயில் காரணமாக மக்கள் வெளியில் நடமாட அஞ்சுகிறார்கள். செங்கல் சூளைக்குள் இருப்பது போல் தகக்கும் வெப்ப சூழலில் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.
மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. நகரம், கிராமம் என்று இல்லாமல் அனைத்து பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.
இதே நிலை தெலுங்கானா மாநிலத்திலும் நிலவுகிறது. வரங்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று சிங்கனேலியில் 120.2 டிகிரி வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் 118.4 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது.
இரு மாநிலங்களிலும் இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களை ஆந்திர அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
மேலும் பொதுமக்களின் நலன் கருதி ஆங்காங்கோ நீர் மோர் மற்றும் குடிநீர் பந்தல் அமைக்கும்படி தெலுங்கு தேசம் தொண்டர்களை ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டு உள்ளார்.
Average Rating