தீயணைப்பு வீரரை கம்பியால் தாக்கிய சக வீரருக்கு வலைவீச்சு
செங்கோட்டை: டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபோது ஏற்பட்ட தகராறில் செங்கோட்டை தீயணைப்பு வீரருக்கு கம்பியடி விழுந்தது. இது தொடர்பாக போலீசார் சக வீரரை தேடி வருகின்றனர். செங்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கோட்டை முத்துகுமார். இவர் செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரராக பணிபுரிந்து வருகிறார். இங்கு மேலப்பாளையத்தை சேர்ந்த மாரிராஜா என்பவரும் வீரராக உள்ளார். முத்துகுமார் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அப்போது தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உள்ள ஓய்வறையில் மாரிராஜா டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவி சத்தம் அதிகமாக இருந்ததால் முத்துகுமார், மாரிராஜாவிடம் வால்யூமைக் குறைக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மாரிராஜா அருகில் கிடந்த கம்பியை எடுத்து முத்துகுமாரை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து முத்துகுமார் செங்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கனகாபாய் விசாரித்து மாரிராஜாவை தேடி வருகிறார்.