விண்ணில் பறக்க இருக்கும் முதல் பாகிஸ்தான் பெண் 35 வயது நமீரா சலீம்
பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக விண்ணில் பறக்க இருக்கிறார். அவர் பெயர் நமீரா சலீம். 35 வயதான இவர் விண்வெளிப்பயணத்துக்கான பயிற்சியை சமீபத்தில் முடித்து இருக்கிறார். இவர் வருகிற 2009-ம் ஆண்டு உலகின் முதல் வர்த்தக ரீதியிலான விண்வெளிப்பயணத்தில் விண்வெளியில் பறக்க இருக்கிறார். பாகிஸ்தானை சேர்ந்த நமீரா சலீம் பல்வேறு திறமைகள் படைத்தவர். இசைக்கலைஞர், சிற்பி, ஆடை வடிவமைப்பாளர், கவிஞர் என்று பல்வேறு துறைகளில் ஈடுபாடும், ஆர்வமும் உடையவர். விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கான விண்வெளி வீராங்கனையாக இவர் கடந்த 2006-ம் ஆண்டு தேர்ந்து எடுக்கப்பட்டார். பணம் செலுத்தி விண்வெளியில் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் 100 பேரில் இவரும் ஒருவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதற்காக இவர் மருத்துவ தேர்வில் தேர்ச்சி பெற்றதும், அவருக்கு விண்வெளி வீராங்கனைக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. வர்ஜின் கலக்டிக் மேற்பார்வையில் இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி இப்போது முடிந்துவிட்டது. அவர் விண்வெளி பயணத்துக்கு தயாராகி இருக்கிறார்.
சந்தோஷமாக இருக்கிறேன்
பயிற்சி முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். இது மறக்க முடியாத தருணம் ஆகும் என்று கூறிய அவர், நான் விண்வெளியில் பயணம் செய்யும் முதல் பாகிஸ்தானியர் மட்டும் அல்ல, பாகிஸ்தானின் முதல் பெண்ணும் கூட. இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதுவரை முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானி பெண்களுக்கும் தடை செய்யப்பட்டு இருந்த துறைகளில் நுழைவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும், பாரபட்ச நடவடிக்கைகளுக்கு பெண்கள் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்தார்.
துபாயில் வசிக்கிறார்
நமீரா சலீம், கராச்சி நகரில் பிறந்தவர். இவர் இப்போது துபாயிலும், பிரான்சிலும் வசித்து வருகிறார். அவர் தந்தை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். அவர் தாயார் இந்தியாவில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். டெல்லியில் வளர்ந்தார்.
நமீரா கல்லூரியில் படித்த போதே இவருக்கு வானியல் ஆராய்ச்சியில் ஈடுபாடு ஏற்பட்டது. மேற்படிப்புக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், நிïயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகம் பற்றி படித்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தபோது தான் இவர் விமானம் செலுத்த கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் கவிதை எழுதி அவற்றை புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார்.