3 பெண் குழந்தை பெற்றதால் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா!!
திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரும் அதே பகுதியை சேர்ந்த புனிதாவும் கடந்த 2005–ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு விஷாலி, அனிஷா, ஸ்ரீனிசா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அடுத்தடுத்து மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் புனிதாவுடன் குடும்பம் நடத்த ராமமூர்த்தி மறுத்தார். மேலும் அவரை கொடுமைபடுத்தினார். இதற்கு ராமமூர்த்தியின் பெற்றோர் உடந்தையாக இருந்தனர்.
இதுபற்றி புனிதா, வெங்கல் போலீஸ் நிலையத்திலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு புனிதா, 3 பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் ராமமூர்த்தி, கீழானூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணை 2–வது திருமணம் செய்தார்.
இதுபற்றி தெரிந்ததும் இன்று காலை புனிதா, 3 பெண் குழந்தைகளுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். திடீரென அவர் கலெக்டர் அலுவலக வாசலில் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
2–வது திருமணம் செய்த கணவர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து தன்னுடன் வாழ வைக்க வேண்டும். என்னை கொடுமைப்படுத்திய கணவரின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் வீரராகவராவ், புனிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து புனிதா அங்கிருந்து குழந்தைகளுடன் புறப்பட்டு சென்றார்.
புனிதாவின் புகார் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உடனடியாக உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating