கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!
கோவை மதுக்கரை மார்க்கெட்டில் மதுக்கரை தாசில்தார் அலுவலகம் உள்ளது.
இதில் தலைமை நில அளவையாளராக தங்கவேல் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த இவர் கடந்த 1 வருடமாக மதுக்கரையில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இவரிடம் கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி மணி என்ற அய்யமுத்து(52) என்பவர் தனது தந்தைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்திற்கு கம்ப்யூட்டர் சிட்டா கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.
தங்கவேல் நிலத்தை அளந்து சிட்டா தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, நில அளவீடு செய்ய அரசு கட்டணம் மட்டும் செலுத்துகிறேன் என அய்யமுத்து கூறினார். இதைக்கேட்ட தங்கவேல், நிலத்தை அளக்கவும், கம்ப்யூட்டர் சிட்டா தரவும் மறுத்துவிட்டார்.
கடந்த 3 மாதமாக அய்யாமுத்து பலமுறை அலைந்து கம்ப்யூட்டர் சிட்டா கேட்டு தங்கவேலுவை சந்தித்து பேசினார். அப்போது அவர் பணம் தராவிட்டால் சிட்டா கிடைக்காது, எங்கே புகார் செய்தாலும் சிட்டா வாங்க முடியாது, என்னை விட்டால் வேறு யாரும் நிலத்தை அளந்து தர மாட்டார்கள் என கூறி உள்ளார்.
இதுகுறித்து அய்யமுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் நில அளவை அதிகாரி தங்கவேலுவை மடக்கிப் பிடிக்க திட்டம் வகுத்தனர். அதன்படி நேற்று அய்யமுத்துவிடம் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.5 ஆயிரம் பதண்தை கொடுத்து அனுப்பினர். அவர் மதுக்கரை தாலுகா அலுவலகத்திற்கு சென்று தங்கவேலுவை சந்தித்து பேசினார். அப்போது நிலத்தை அளந்து தர முதல்கட்டமாக ரூ.5 ஆயிரம் தருகிறேன், சிட்டா பெறும் போது மீதி பணத்தை தந்து விடுகிறேன் என கூறினார்.
உடனே தங்கவேல் ரூ.5 ஆயிரத்தை வாங்கிக் கொண்டார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று தங்கவேலுவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பெருந்துறையில் உள்ள தங்கவேலுவின் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அங்கு ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தங்கவேல் மீது லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating