இரணியல் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!
இரணியல் அருகே ஆழ்வார் கோவில் தாழ்ந்த விளையை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது உறவினர் மகள் அஜிதா (வயது 19). இவர் சிதம்பரத்தின் வீட்டில் தங்கி வளர்ந்து வந்தார்.
தற்போது அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வாரம் திடீர் என்று அஜிதா மாயமானார். இதுகுறித்து சிதம்பரம் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அஜிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அஜிதா தனது காதலன் அருள் (24) என்பவருடன் இரணியல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தாங்கள் இருவரும் ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். பின்னர் திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்தார்.
இதையடுத்து காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த விவரத்தை அஜிதாவின் உறவினர்களுக்கும் அருளின் பெற்றோருக்கும் போலீசார் தெரிவித்தனர். இரு வீட்டாரும் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அஜிதாவை தங்களுடன் வருமாறு சிதம்பரமும் மகேஸ்வரியும் அழைத்தனர். அதற்கு அஜிதா அவர்களுடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். வாழ்ந்தால் காதலனுடன்தான் வாழ்வேன் என்று உறுதியாக கூறினார். இதனால் கண் கலங்கிய சிதம்பரமும் மகேஸ்வரியும் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பாச போராட்டம் தோல்வி அடைந்ததால் அஜிதாவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு சிதம்பரம் மகேஸ்வரி தம்பதியினர் அங்கிருந்து சென்றனர்.
அஜிதா தனக்கும் தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து காதலர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Average Rating