நடிகர் சங்கத் தலைவர் தேர்தல்: சரத்-நாசர் மோதல்
நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் வேட்பு மனு தாக்கல்செய்தார். கடைசி நேரத்தில் நடிகர் நாசரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு சரத்குமார் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள்.
இதையடுத்து நடிகர் சரத்குமார் சங்கத்திற்கு வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவை வழிமொழிந்து தற்போதைய தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பியிருந்தார்.
சரத்குமார் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு மனோரமா, விஜயக்குமார் ஆகியோரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளையும் போட்டியிடுகிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சிலம்பரசன், பிரஷாந்த், சத்யராஜ், முரளி, அப்பாஸ், செந்தில், பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், அலெக்ஸ், குண்டு கல்யாணம், செல்வராஜ், வீரமணி, பசி சத்யா, ஸ்ரீபிரியா, விந்தியா, மும்தாஜ் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகிறார்கள்.
இவர்களது எதிரணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.வி.சேகரும், பொருளாளர் பதவிக்கு நல்லதம்பியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுத் தாக்கல் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் நடிகர் நாசர் சார்பில் திடீரென வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நடிகர், நடிகைளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாசர் சார்பில் அவரது மனைவி கமீலா நாசர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்வில் அரசியல் இருக்கக் கூடாது, அரசியல் சம்பந்தப்படட்வர்கள் யாரும் போட்டியிடக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நாசர் வற்புறுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த்துடன் நேருக்கு நேர் விவாத¬ம் செய்தார். இதனால் அவரை தலைவர் தேர்தலில் நிற்க ஒரு பிரிவு கூறி வந்தது. ஆனால் அதை நாசர் ஏற்காமல் இருந்தார்.
இந்த நிலையில் திடீரென நாசர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நாசருக்கு சில முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே போட்டியில்லாமல் சரத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது போட்டி உருவாகியுள்ளதால் தேர்தலில் விறுவிறுப்பு கூடியுள்ளது.