திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்!!
திருப்பூர் தாராபுரம் புதூர்பிரிவு பகுதியில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிஷோர் குமார் ஆகியோருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.
அதை நிர்வாகி கிருஷ்ணன் பிரித்து பார்த்தார். அந்த கடிதத்தில் அனுப்புனர் முகவரி இல்லாமல் இருந்தது. மேலும் கிருஷ்ணன், கிஷோர் குமார் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்து கிருஷ்ணன் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார். இதேபோல் இந்து முன்னணி கழக தலைவர் கோபிநாத், விஸ்வ இந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் நாச்சி முத்து ஆகியோருக்கும் கொலை மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடிதம் கோவையில் இருந்து இந்து முன்னணி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து திருப்பூரில் உள்ள இந்து அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Average Rating