காட்பாடியில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது!!
காட்பாடி பிரம்மபுரத்தில் வசிக்கும் இந்திராணி என்பவரது வீட்டின் அருகே சம்பவத்தன்று குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த இந்திராணி தனது வீட்டை சுற்றிலும் தேடிபார்த்தார்.
அப்போது வீட்டின் அருகே முட்புதருக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காட்பாடி போலீசாருக்கு இந்திராணி தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து காட்பாடி தனிப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஏட்டு சபாபதி, பெண் போலீஸ் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். குழந்தையின் முகம், உடல் முழுவதும் முட்களால் கீறப்பட்டிருந்தது.
குழந்தையை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
இதற்கிடையே குழந்தையை முட்புதரில் வீசி சென்ற கல்மனம் படைத்த தாய் யார்? என்பது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர். அந்த பகுதியில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த பெண்களை பற்றியும் அதற்கான சிகிச்சை பெற்றவர்கள் பற்றியும் போலீசார் தகவல்கள் சேகரித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரேமா (40) என்ற பெண் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பிரேமாவின் வீட்டுக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது முட்புதரில் வீசப்பட்டது பிரேமாவின் குழந்தை தான் என்பது தெரியவந்தது.
இதுபற்றி பிரேமாவிடம் விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. பிரேமாவின் கணவர் பெயர் குமார். இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். திடீரென குமார் இறந்துவிட்டார். அதன் பின்னர் பிரேமா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஒரு நபருக்கும் இடையே தகாத உறவு மலர்ந்தது. இந்த உறவின் காரணமாக பிரேமா கர்ப்பிணியானார். இந்தநாள் வரை வெளி உலகுக்கு இதை மறைத்து பிரேமா வாழ்ந்து வந்தார்.
ஆனால் நிறைமாத கர்ப்பிணியாகி குழந்தை பிறந்ததும் மறைக்க முடியாமல் போனது. எனவே தான் முட்புதரில் குழந்தையை பிரேமா வீசியது விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து பிரேமாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 317–வது (பிறந்த குழந்தையை மரணத்துக்கு ஏதுவாக கொடுமை செய்தல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாயே தனது குழந்தையை முட்புதரில் வீசி கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating