அனுராதபுரத்திற்குப் புதிய தளபதி நியமனம்
அனுராதபுரா விமான தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அனுராதபுரா மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ராணுவ தளபதி ஒருவரை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே நியமித்துள்ளார். அனுராதபுரா மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கைக்கான புதிய கமாண்டாரக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் ராணுவமும், காவல்துறையும் செயல்படும் என இலங்கை அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரா மாவட்டத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அதிபர் ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கருணாரத்னே, முன்னாள் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆவார். தற்போது, இலங்கை ராணுவத்தின் 11வது படைப் பிரிவின் பொது கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதே பணியைத் தொடர்ந்து கொண்டு அனுராதபுரா பாதுகாப்புப் பணியையும் கருணாரத்னே மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு புலிகள் வசமிருந்து மீட்கப்பட்ட முகமலை பகுதியில் போரிட்ட ராணுவப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.