இலஞ்சம் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது
கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, உறுதியளித்து அதற்காக 6 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுஷா விஜேசீலன் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தமது மகனை முன்னணி பாடசாலையொன்றில் சேர்ப்பிப்பதற்காக இவருக்கு இத்தொகையைச் செலுத்தியுள்ளனர். இப்பெண் தனது நகைகளை அடகு வைத்துக் கூட இப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் அதனைப் பெற்றுக்கொண்ட போதும் உறுதியளித்தமைக்கமைய பாடசாலையின் அனுமதியைப் பெற்றுத் தராததால் அப்பெண், பணத்தை மீளத் தரும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் காசோலையொன்றை வழங்கியுள்ளார். அவரது கணக்கில் பணம் இல்லாததால் அக்காசோலை திரும்பியதையடுத்து, அப்பெண் கல்கிசை நீதிமன்றில் இது தொடர்பாக புகார் மனுவொன்றைத் தாக்கல் செய்ததையடுத்து பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வங்கிக் கணக்கின் அறிக்கைகளைப் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.