15 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு!!
மூணாறை சேர்ந்த ஒரு கூலித்தொழிலாளி தம்பதியின் மகள் ரோசி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 8–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கும் ஒரு தமிழக வாலிபருக்கும் அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். நேராக பெற்றோர் வீட்டிற்கு சென்ற அவர் தனக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கூறி அழுதார். ஆனால் பெற்றோர் அதை கேட்காமல் அவரை சமரசப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தனர்.
இதனால் அங்கிருந்து வெளியேறிய அந்த சிறுமி மூணாறு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை கேட்டு சென்றார். சிறுமியை பற்றி கடைக்காரர் விசாரித்தபோது அவர் தனக்கு நடந்த கட்டாய திருமணத்தை பற்றி கூறி கதறி அழுதார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு சென்று அந்த சிறுமியை மீட்டு சென்றனர். மேலும் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating