இலங்கை ராணுவத்துடன் மோதல்: 30 விடுதலைப்புலிகள் சாவு
இலங்கையில் அனுராதபுரம் விமான தளம் மீது நேற்றுமுன்தினம் அதிகாலையில் விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த விமான தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அடுத்தடுத்து சண்டை நடந்தது. வவுனியாவில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கதுருவிதாங்குளம் பகுதியில் விடுதலைப்புலிகள் ஊடுருவ முயன்றனர். தக்க நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 15 விடுதலைப்புலிகள் பலியானதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு தலைமை தாங்கி வந்த விடுதலைப்புலி தலைவி சாந்தியும் பலியானார். பலியானவர்களின் உடல்களை விடுதலைப்புலிகள் தூக்கி சென்று விட்டனர். மன்னார் மாவட்டம் பரப்பகந்தல் என்ற இடத்தில் விடுதலைப்புலிகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் விடுதலைப்புலிகள் தரப்பில் 5 பேர் பலியானதாக அவர்களின் ஒயர்லெஸ் செய்தியை இடைமறித்து கேட்டபோது தெரிய வந்ததாக ராணுவத்தினர் கூறினர்.
30 பேர் சாவு
நரிகுளம் பகுதியில் ரோந்து சென்ற ராணுவத்தினர், தவறுதலாக விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி வழியாக சென்றனர். அவர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்து விட்ட விடுதலைப்புலிகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் 10 விடுதலைப்புலிகள் பலியானார்கள். ராணுவ தரப்பில் உயிர்ச்சேதம் இல்லை. இதன்மூலம், ஒரே நாளில் நடந்த சண்டையில் 30 விடுதலைப்புலிகள் பலியானார்கள்.