எட்டயபுரம் அருகே சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன்: போலீசார் வலைவீச்சு!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி சீனியம்மாள் (வயது 70). இவர்களுக்கு மாரியப்பன் (35) என்ற மகனும், முத்துமாரி, சரஸ்வதி என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
கடந்த சில மாதங்களாக கூலித்தொழிலாளியான மாரியப்பனுக்கும், அவரது தங்கை முத்துமாரிக்கும் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சிங்கிலிபட்டி கிராமத்திற்கு முத்துமாரி வந்திருந்தார். அப்போது மாரியப்பனுக்கும் முத்துமாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரையும் சீனியம்மாள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
குடிபோதையில் இருந்த மாரியப்பன் திடீரென அருகே கிடந்த உருட்டுகட்டையால் சீனியம்மாள், முத்துமாரி ஆகிய இருவரையும் சரமாரி தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துமாரி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சீனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரியப்பனை தேடி வருகின்றனர்.
கடந்த 2009–ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறின் போது மாரியப்பன் தனது தந்தை சண்முகராஜை அடித்து கொலை செய்துள்ளர். இந்த வழக்கு விளாத்திகுளம் கோர்ட்டில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating