மாப்பிள்ளை பிடிக்காததால் 30 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்த மணப்பெண்!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது. இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. அவர் பி.எட்.படித்து வருவதால் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் 3–வது பெண்ணான தனலட்சுமி (வயது20)க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி நடத்தும் பயிற்சி கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும், தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (22) என்பவருக்கும் இடையே இன்று காலை ஆட்டுக்காரன்பட்டியில் திருமணம் நடப்பதாக இருந்தது.
மணமகன் புத்தாடை அணிந்து மணவறையில் அமர்ந்து இருந்தார். மணப்பெண்ணுக்கு நலுங்கு நிகழ்ச்சி நடந்தது. மணப்பெண் பட்டப்புடவை அணிய அறைக்கு சென்றார். திரும்பி மணமேடைக்கு வரும் போது அவர் மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாப்பிள்ளை பிடிக்காதால் 30 மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார். மணப்பெண் மயங்கி விழுந்ததால் திருமணம் நின்றது. திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் மணப்பெண்ணின் உறவினர்கள் கதறி அழுதனர்.
Average Rating