மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்!!
அரியானா தலைநகர் சண்டிகர் அருகேயுள்ள குருசேத்திரா பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கு இன்று காலை வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் அந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை சாதாரண மிரட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, மூன்று நான்கு முறை இதேபோன்ற அழைப்பு வந்ததையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் விரைந்துவந்த போலீசார், அந்த பள்ளியை சுமார் மூன்று மணிநேரம் துல்லியமாக பரிசோதித்தபோது வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இதுதொடர்பான விசாரணையில் அந்த மர்ம அழைப்பு வந்த எண்ணை கண்காணித்த போலீசாருக்கு, அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று நடைபெறவிருந்த ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்கம் வகையில் இந்த வெடிகுண்டு புரளியை கிளப்பியதாக தெரியவந்தது.
வகுப்பில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் அந்த மாணவனைப் பற்றி அவனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்கப் போவதாக ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிகின்றது. பெற்றோருக்கு தனது சேட்டைகள் பற்றி தெரியவந்தால் முதுகுத்தோலை உரித்து விடுவார்கள் என தெரிந்துக்கொண்ட அந்த 13 வயது சிறுவன், இந்த கூட்டத்தை தடுக்கும் வகையில் பள்ளிக்கு இன்று போன் செய்து வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டதாக குறிப்பிட்டுள்ள போலீசார், அந்த மாணவனை நாங்கள் கைது செய்யவில்லை. அவனுக்கு மனவளத்துக்கான கவுன்சலிங் அளிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தனர்.
Average Rating