தேனி மாவட்டத்தில் 15 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!
தேனி மாவட்டம் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருந்தாலும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்ற தம்பதியினர் தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 10–ம் வகுப்போ, 12–ம் வகுப்போ படித்து முடித்தவுடன் திருமணம் செய்து விடுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கிராமங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொள்வது கிடையாது. அந்த பகுதியை சேர்ந்த யாரேனும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கோ, சைல்டு லைன் அமைப்பிற்கோ போன் செய்தால் மட்டுமே அந்த திருமணங்கள் தடுக்கப்படுகின்றன.
கடந்த மாதம் பள்ளி இறுதி தேர்வு முடிந்த நாள் முதல் இதுவரை தேனி மாவட்டத்தில் 15–க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பல திருமணங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமலும் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
எனவே இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதி தெரிவிக்கையில், படிக்கும் காலத்தில் தனது மகள் வேறு யாரையாவது காதலித்து அதன் மூலம் ஊரை விட்டு சென்று விடுவாரோ? என்ற அச்சத்தில்தான் பெரும்பாலான குழந்தை திருமணங்கள் நடைபெறுகிறது. காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கூட தங்கள் குழந்தை வேறு சமூகத்தினரை காதலித்து விடுவாரோ என்ற அச்சத்திலும் இதுபோன்ற குழந்தை திருமணங்களை நடத்தி விடுகின்றனர். 12–ம் வகுப்பு முடித்த பிறகு திருமணம் செய்து வைத்து விட்டு கல்லூரிக்கு அனுப்பும் பழக்கமும் இப்பகுதியில் இருக்கிறது.
மேலும் இந்த திருமணத்தை வேறு யாரேனும் தடுத்து நிறுத்தக்கூடாது என்பதற்காக பத்திரிகை அடிக்காமல் ஏதாவது ஒரு கோவிலில் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
எனவே இதுபோன்ற திருமணங்களை தடுத்து நிறுத்துவதில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், அவர்களுக்கு அளிக்க வேண்டிய தடுப்பு ஊசிகள் ஆகியவை எவ்வாறு கணக்கிட்டு போடப்படுகிறதோ அதேபோல் இளம்வயது குழந்தைகள் திருமணங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
நேற்றும் வைகை அணை அருகில் உள்ள ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த பிச்சை ராஜ் என்பவரின் 17 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கிடைக்கவே அவர்கள் அங்கு சென்று அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
Average Rating