ஊட்டியில் செந்நிறமாக மாறிய ஏரிநீர்: கிராம மக்கள் அதிர்ச்சி!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பைகார அருகே டி.ஆர்.பஜார் ஏரி உள்ளது. சோலைக்காடுகளில் உற்பத்தியாகும் தண்ணீரும் மழைநீரும் இந்த ஏரியில் கலக்கிறது. கிளன்மார்கன் வழியாக கொண்டு செல்லப்படும் இந்த ஏரி தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
டி.ஆர்.பஜார் ஏரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த ஏரி தண்ணீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர். கால்நடைகள், விலங்குகள் தாகம் தணிக்கவும் இந்த ஏரி பயன்படுகிறது.
இந்த நிலையில் டி.ஆர்.பஜார் ஏரி நீர் செந்நிறமாக காட்சியளிப்பதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வன அலுவலர் பத்திரசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து செந்நீரை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது சில இடங்களில் நீர்நிலைகளை சுற்றி சீகை மரங்கள் வளர்ந்து இருக்கும்.
எட்டு ஆண்டு கடந்து வளர்ந்து நிற்கும் சீகை மரங்களின் வேர் பகுதியில் இருந்து ஒரு பசை போன்ற திரவம் வழிந்து நீர் நீலைகளில் கலக்கும். அப்போது அந்த நீர் சிவப்பு நிறமாக மாறும்.
இதனால் அங்குள்ள மண்ணில் அமிலத்தன்மை அதிகரித்து மண் வளம் கெடும். எனவே பழமைவாய்ந்த சீகை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பழமைவாய்ந்த சீகை மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்றார்.
Average Rating