நெல்லை அருகே லாரி மீது அரசுபஸ் மோதி 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்
நெல்லை அருகே உள்ள மானூர் ரஸ்தாவில் ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசுபஸ் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். உக்கிரன்கோட்டையில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று காலை 5.30 மணியளவில் புறப்பட்டு நெல்லை சந்திப்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. மானூர் ரஸ்தா அருகே வந்தபோது ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லோடு நிரம்பிய லாரிமீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் லாரியின் பின்புறம் நின்று தார்பாய் போட முயன்று கொண்டிருந்த லாரி டிரைவரான தென்கலத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி (வயது 50) மற்றும் ராமையன்பட்டியைச் சேர்ந்த லாரி கிளீனர் மாடசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் லோடுமேன் ரமாகிருஷ்ணன் என்பவர் படுகாயமடைந்தார்.மானூர் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரசு பஸ்டிரைவர் துரைராஜை கைது செய்தனர்.