கடும் வெயிலுக்கு 2.4 கோடி கோழிகள் சாவு: இந்தியாவில் இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!!
இந்தியாவில் இந்த ஆண்டின் கோடைக்காலத்தில் வெப்பம் தாங்க முடியாமல் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் சுமார் இரண்டரை கோடி கோழிகளும் அதிக வெப்பத்தால் இறந்துள்ளன. இதன் விளைவாக, கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இவற்றில் 55 சதவீதம் கோழிகள் நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இறந்துள்ளன. இந்த இழப்பினால், இந்திய கோழிப்பண்ணை தொழில் சுமார் நூறு கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த மாதம் (பண்ணை விலையில்) 70-80 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகளின் விலை 30 சதவீதம் உயர்ந்து நூறு ரூபாயை தாண்டி விற்கப்படுகின்றது. இதன் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 150 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 24 கோடி கோழிகள் வளர்க்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சராசரியாக கோடைக்காலத்தில் 2-3 சதவீதம் வெயில் தாங்க முடியாமல் இறந்துப் போவது உண்டு. ஆனால், இந்த ஆண்டு 10 சதவீதம் கோழிகள் செத்துப் போனதால் இறைச்சியின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Average Rating