காற்று மாசு தன் மகனை கொல்வதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு ஓட்டம்!!
காற்று மாசு தன் மகனை மரணத்தை நோக்கி தள்ளுவதாக கூறி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் டெல்லியை விட்டு வெளியேறியது கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் டைம்ஸின் தெற்காசியாவிற்கான செய்தியாளராக டெல்லி வந்தார் கார்டினர் ஹாரிஸ். டெல்லியின் காற்று மாசு பற்றி சமீபத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் அவர் “ஆரம்பத்தில் நான் டெல்லிக்கு சென்று வசிப்பதில் உள்ள ஆபத்தை உணரவில்லை. ஆனால் என் மகனின் இன்ஹேலர் வேலை செய்வதை நிறுத்தியவுடன் தான் ஆபத்தை புரிந்து கொண்டேன். மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் என் மற்ற குழந்தைகளையும் காற்று மாசால் பதிக்கப்படாத வகையில் கவனமாக பார்த்துக்கொண்டோம்.
கொஞ்ச நாட்களுக்கு பிறகு எங்களின் புத்தம் புதிய அடுக்கு மாடி வீட்டின் குழாய்களில் கழிவு நீர் கசிவு ஏற்பட்டு எனக்கு அதிர்ச்சி அளித்தது. இதை அனைத்தையும் தாண்டி தொடர்ந்து டெல்லியில் வசித்து வந்தோம். ஆனால் கொஞ்ச காலத்திற்கு முன்பாக எங்கள் விட்டின் அருகில் வசிப்பவர் ஒருவர் நச்சு வாயுக்களை வெளியிடும் பொருட்களை எரித்தார். இதனால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக மாறியது. இந்த நச்சு வாயு வீட்டிற்குள் இருந்த என் மகனையும் பாதித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவனுக்கு மீண்டும் உடல் நலம் குன்றியது. அப்போது தான் இனிமேல் டெல்லியில் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன்” என கூறியுள்ளார்.
மேலும் அந்த கட்டுரையில் காற்று மாசு காரணமாக ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும் எழுதியுள்ளார். முக்கியமாக நுரையீரல் கொள்ளளவு குறைவது, இளம்வயதில் மரணம், மன இறுக்கம், வலிப்பு நோய், நீரிழிவு நோய், அறிவாற்றல் குறைவது ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். டெல்லி மட்டும் அல்லாமல் இந்தியாவின் மற்ற நகரங்களும் கடுமையான காற்று மாசால் அவதிப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 10 குழந்தைகளில் 4 பேருக்கு கடுமையான நுரையீரல் பிரச்சினை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களை சேர்ந்த 35 சதவீத குழந்தைகள் தீவிரமான நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating