வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது!!
வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா. இவர் ஜெய ஹோ என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனில் முகி மற்றும் நரேஷ். இந்த இருவரும் குரூப்பில் பல வக்கிரமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்துள்ளனர். இதற்கு அட்மின் பண்டி குர்ஜீயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இருவரும் அதை பொறுப்படுத்தாமல் தொடர்ந்து மோசமான படங்களையும் செய்திகளையும் பகிர்ந்து வந்ததையடுத்து, அந்த இருவரையும் குரூப்பை விட்டு நீக்கிவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த இருவரும் தங்களை திரும்ப சேர்த்துக்கொள்ளும்படி பண்டி குர்ஜீயாவை மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் அடிபணியாததால், இரண்டு ரவுடிகளை அனுப்பி கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்க வைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இத்தாக்குதல் முழுவதும் அவரது கடையில் இருந்த காமிராவில் பதிவானதால், குற்றவாளிகள் இருவரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனில் முகி மற்றும் நரேஷ் ஆகியோர் தான் குர்ஜீயாவை தாக்க சொன்னதாக இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து அனில் முகி மற்றும் நரேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Average Rating