கோவை விமான நிலையத்தின் சுவரை தாண்டி குதித்த இளம்பெண் கைது!!
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு மிகுந்த இந்த விமான நிலையத்துக்குள் அடிக்கடி மர்ம நபர்கள் உள்ளே புகுவது வழக்கமாகி உள்ளது.
இன்று காலை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் உள்ள விமான நிலையத்தில் 5–வது வாசல் பகுதியில் உள்ள சுவரை ஒரு பெண் தாண்டி குதித்து விமான நிலையத்துக்குள் புகுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடத்திய போது கைதான பெண் மேற்கு வங்காளம் மாநிலம் பட்டாலி கிராமத்தை சேர்ந்த சானு நாயக்கின் மனைவி மினிநாயக் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மினிநாயக் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதன் காரணமாக மினிநாயக் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது வேறு ஏதாவது சதிச்செயல் புரிவதற்காக விமான நிலையத்துக்குள் நுழைய முயற்சித்து போலீசிடம் சிக்கியதால் நடிக்கிறாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
Average Rating