பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம் சீகூர்–செந்துறை சாலையில் வசிஷ்டபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் இருந்து வருகிறார். இந்த சங்கத்தில் பலர் நகைகளை அடகு வைத்து பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் ஏராளமானோர் இந்த வங்கியில் சேமிப்பு கணக்கிலும் பணம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு வங்கியை பூட்டிச் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி செயல்படவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சியை அரங்கேற்றி உள்ளனர். இரவு 2.30 மணிக்கு மேல் அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கியின் 2 ஷட்டர் பூட்டுகளை உடைத்துவிட்டு வெளியில் உள்ள அலாரத்தையும் செயல்படாமல் செய்துள்ளனர்.
பின்னர் சாதுர்யமாக வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். அப்போது திடீரென உள்புறத்தில் உள்ள அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.
இந்த சத்தத்தை கேட்டதும் தூக்கத்தில் இருந்த கிராமத்தினர் பதறி விழித்து எழுந்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு வங்கிக்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடிவிட்டனர். லாக்கரை அவர்கள் உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் வங்கியை பார்வையிட்டனர். பின்னர் கொள்ளை முயற்சி பற்றி குன்னம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஏ.டி.எஸ்.பி. விஜயபாஸ்கர், மங்களமேடு போலீஸ் டி.எஸ்.பி. கோவிந்தராஜ், குன்னம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
மேலும் அங்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். நள்ளிரவு கிராம பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating