ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு!!
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் தெற்கு சைதாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் விநாயகம். அவரது மனைவி சாந்தி (வயது 47). சாந்தியின் சகோதரர் வேல்முருகன் (34).
சாந்தி, அவரது மகள்கள் ராணி, லாவண்யா ஆகியோர் தனது வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் குடும்ப அட்டை ஆகியவற்றை திருடிச் சென்று விட்டதாக வேல்முருகன் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் சாந்தி கடந்த 24–ந் தேதி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். விசாரணைக்கு பின்னர் மாலை சுமார் 6½ மணியளவில், தான் ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை போலீஸ் நிலைய வளாக பகுதியிலேயே தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அதை பார்த்த அங்கிருந்த காவலர்கள் உடனடியாக சாந்தி மீது பிடித்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அனுப்பி வைக்கப்பட்ட சாந்தி அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவர் தனது சகோதரர் வேல்முருகன், தந்தை அர்ச்சுணன் ஆகியோர் வீட்டிலிருந்து 100 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடி சென்று விட்டதாக புகார் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால்தான் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் சாந்தியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating