டயானா இறந்துவிட்டார்; விரைந்து வா என புகைப்படக்காரர் கூறினார்
இளவரசி டயானா கார் விபத்தில் பலியானது குறித்த வழக்கு விசாரணை நான்காவது வாரமாக நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்த யானிக் சென்னா என்ற பிரான்சு நாட்டுக்காரர் நீதிபதி முன் புதன்கிழமை வாக்குமூலம் அளித்தார். அல்மா என்ற சுரங்க பாலத்தில் 1997 ஆகஸ்ட் 31 ஆம் தேதி விபத்து நடந்தது. விபத்து நடந்தபோது நான் என் காதலியுடன் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தேன். விபத்து நேரிட்டவுடன் காரை முதலில் நெருங்கிய புகைப்படக்காரர் மற்றொரு புகைப்படக்காரரைப் பார்த்து “டயானா இறந்துவிட்டார்; சீக்கிரம் வா’ என்று கூறியது காதில் விழுந்தது. இரண்டாவதாக வந்த புகைப்படக்காரர் ஸ்கூட்டரில் வந்தார். நொறுங்கிக்கிடந்த காரைச் சுற்றி 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் காருக்குள்ளேயும் எட்டிப்பார்த்தனர்” என்றார் யானிக் சென் னா. சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு முக்கிய சாட்சியான கிரிகோரி ராசினியர் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில், “”காருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவர் காரின் மீது மோதாமல் தடுக்க வேகமாக பிரேக் போட்டு பைக்கைத் திருப்பி அந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டதை பார்த்ததாக கூறினார்.
மோட்டார் பைக் பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்டதும் அந்த இடத்திலிருந்து கூக்குரல் எழுந்தது” என்றார்.
விபத்தில் டயானாவுடன் பலியான அவரது காதலர் டோடி அல்-ஃபயதின் தந்தை முகமது அல்-ஃபயது தனது வாக்குமூலத்தில், “இளவரசர் பிலிப்பின் உத்தரவுக்கு இணங்க பிரிட்டிஷ் உளவு நிறுவனம்தான் இவர்களைக் கொலை செய்துள்ளது.
“எம்ஐ6 என்ற உளவுத்துறையினர் “பிளாஷ் கன்’ எனப்படும் பிரகாசமான வெளிச்சத்தை உண்டாக்கும் கருவியைக் கொண்டு டயானா சென்ற கார் டிரைவரின் கண்ணை கூசச்செய்து காரை விபத்தில் சிக்கச் செய்துள்ளனர்’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.