நடுக்கடலில் நான்கு யாழ். தமிழர்கள் கைது
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் வைத்து “பைவர்” படகில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்களை கடலோரக் காவல் படையினர் நேற்றிரவு பிடித்துள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்ளா என்று விசாரணை நடந்து வருகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோரக் காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது “பைவர்” படகு ஒன்றில் நான்கு பேர் விரைந்து சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்தனர். நால்வரும் அகதிகளாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர்கள் அகதிகள் இல்லை என்று தெரியவந்துள்ளதையடுத்து. அவர்களை ராமேஸ்வரம் கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. குகனேஸ்வரன், இளையராஜா, காந்தீபன் உள்ளிட்ட அந்த நால்வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிரிவுப் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.